வெள்ளி, 27 ஜூலை, 2012

வாலிபர் வீடு சூறையாடி கொலை மிரட்டல்: முத்தரையர் சங்கத்தலைவர் மகன்களுடன் கைது Tiruchirappalli வியாழக்கிழமை, ஜூலை 26, 1:34 PM IST 0கருத்துக்கள்0 இமெயில் பிரதி


திருச்சி, ஜுலை. 26-

திருச்சி வீர முத்தரையர் சங்க நிறுவன தலைவர் செல்வகுமார். திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள பெரிய கொத்தமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும், தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவன தலைவர் ஆர்.விசுவநாதன் தரப்புக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 12.3.2012 அன்று செல்வகுமார் மண்ணச்சநல்லூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஆர்.விசுவநாதன் தரப்பினர் செல்வகுமாரை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதையும் மீறி செல்வகுமார் கோவிலுக்குள் சென்றார். கடந்த 24.3.2012 அன்று பெரிய கொத்தமங்கலத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது. அங்கு அவரது வீட்டை அடித்து நொறுக்கி பொருட்களையும் சூறையாடியது. அவரது மோட்டார் சைக்கிள், கார் மற்றும் வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதனை தடுத்த செல்வகுமாரை முத்தரையர் சிலைக்கு இனி மாலை போடக்கூடாது, மீறினால் சுந்தர் நகர் மாணிக்கத்தை கொலை செய்தது போல் உன்னையும் கொலை செய்வோம் என்று அந்த கும்பல் மிரட்டிவிட்டு சென்றது.

செல்வகுமார் தமிழக முதல்- அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். அதன்பேரில் விசாரணை நடத்துமாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்டு போலீஸ் உதவி கமிஷனர் காந்தி, எடமலைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தமிழ்நாடு முத்தரையர் சங்க நிறுவன தலைவர் ஆர்.விசுவநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தன்ராஜ் ஆகிய 5 பேர் மீதும் செல்வகுமார் வீட்டை சூறையாடுதல் (427), கொலை மிரட்டல் (506) விடுத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு திருச்சி வரகனேரி வடக்கு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஆர்.விசுவநாதன் வீட்டிற்கு போலீஸ் படை சென்றது. அங்கு தூங்கி கொண்டிருந்த ஆர்.விசுவநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். அவரது மருமகன்கள் ரவிசங்கர், தன்ராஜ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான 5 பேரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முத்தரையர் சங்கத்தினர் ஏராளமானோர் திரண்டனர். முத்தரையர் சங்க நிறுவன தலைவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக